*
எழுத்து வார்த்தை ஒரு மந்திரம்.
அழுத்தி வரலாறு படைக்கும் சுந்தரம் (நன்மை)
அழுக்கின்றி நீரின் மேலும் வானத்திலும்
முழுக்கவென் தலை மேலும் சுற்றுகிறது.
விழுந்திடாத வண்ணத்துப் பூச்சிச் சிறகசைவு.
எழும் இரகசியக் கனவின் பெருக்கம்.
விழுந்து பொங்கி நனைக்கும் நீரூற்று.
வழுதில்லா மலரின் மலர்வு எழுத்து.
*
என்னிலிருந்து பிறக்கும் எழுத்து விதை
மின்னும்! உலகெங்கும் பறவையாய் பரவும்!
அன்னியக் காடு, அமைதி வெளி,
சின்னக் கற்பாறை, சதுப்பு நிலமென
என்னவொரு வித்தியாசமின்றிப் பாரெலாம் பரவுகிறது.
இன்னலற்ற காற்றாக இறுக்கம் இன்றி
இன்னமுத அன்பாக என்றும் ஊடாடுகிறது.
என்னை வெகு சுதந்திரமாக ஆக்குகிறது.
*
கன்னல் கரும்பென நானெண்ணும் எழுத்து
என் புலன் உயிரிற்குள் புகுந்தது.
கன்னங்கரு இரவிலும் வெள்ளி தங்கமாய்
மின்னும் பகலிலும் குமிழ்களாய் எழுகிறது.
என்னெழுத்தின் கவர்ச்சியில் நானே மயங்குவேன்.
சின்ன அகக்காயமும் வானவில்லான எழுத்தாகும்.
வன்னிகை (எழுதுகோல்) சுமையல்ல, சுகமான சுமை
வன்னம் (தங்கம்) எழுத்திற்கு பரிசு புகழுண்டு.
*
வின்னியாசம் (பேச்சுத் திறமை)எழுத்தால் தானே நிறைவுறும்.
பொன்னிலவொளி நிறையும் முற்றமாய் எழுத்து
மென்னகையோடு கைபிடித்துலவும் உலக நடைபாதையில்.
என் கவிக் கதிரின் பிரகாசம்
அன்வயமாய் (இயைபு) நாளும் மக்களோடு கரையட்டும்.
அன்பித்துக் கனவுகளைக் கைத்தடியாக எழுப்பட்டும்.
இன்பித்துத் துணிவை ஏற்றட்டும் எழுத்து.
உன்னதமாயாடும் மயிலின் நடனம் எழுத்து.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 28-8-2017
*
*
*
கோவைப் பதியில் (கோப்பாய்) நன்கு மலர்ந்து
டென்மார்க் வரை பறந்து பாய்கிறது
வெல்லும் இவ்வுணர்வுக் கவிதைச் சிறகுகளின்
வீரியப் பரம்புதலில் உயரப் பறக்கிறது.
*
எழுத்துக்களின் சங்கமம் சொல் தானே!
என்னெழுத்து வாசிப்பில் பேரின்பம் நிறைவு.
எழுத்து வயலில் அகழ்ந்து மேய்தல்
அழுத்தும் தத்துவங்கள் யதார்த்தச் சிறகடிப்பு.
*
எழுதல், வாழ்தல், மகிழ்தல் சாதனை
எழுத்தே மகா பெரும் உணர்வு.
எழுத்தொரு தவம் நானதைச் செய்கிறேன்.
என்னெழுத்து பலரை ஈர்த்து அணைக்கிறது.
*
இழுத்தணைக்க இன்னும் இன்னும் எழுதுகிறேன்.
பழுக்கிறது நவரசங்களும் வானவில் வண்ணமாக.
பொழுதிற்கும் தொலைவான நோக்கில் தேடும்
குழுநிலை எழுத்துக்களன்றி வேறு என்ன!
*
முழவதுமான ஊஞ்சலாட்டம் தான்! ஆம்!
எழுத்துகளோடு ஆடும் இலக்கிய ஊஞ்சல்.
இழுத்தாடுவது பெண்மை, பொறாமை அறியாமை
கழுத்து காதணியென்று கதம்ப ஆட்டம்.
*
விழுத்தகையாய்ப் புதிய எழுத்து விளையாட்டும்
மழுப்பலாகவும் சிலருக்கு, மலைப்பாகவும் ஆகிறது.
எழுதுவது பெண்ணெனவும் சிலருக்கொரு இழிவு.
முழுதாகக் கடலாழமும், வானுயரமும் காணவில்லை.
*
விழுப்பமாக பூவுலக வாழ்வியலின் எழுத்தே
விழுந்தோடும் ஊற்று நீராய் ஓடுகிறேன்.
பழுதற்ற மழை நீராகவும் மணந்து
அழுத்தியோடும் ஆறாகவும் மண்ணில் ஊடுருவுகிறேன்.
*
(விழுத்தகை – பெருஞ்சிறப்பு, விழுப்பம் – நன்மை)
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-6-2017
வல்லமை இணையத்தில்.
https://www.vallamai.com/?p=77475
*
நாற்பத்தைந்து வருடங்கள் (2022)
00
எழுதல் – வாழ்தல் – மகிழ்தல் சாதனை
எழுத்தே மகா பெரும் உணர்வு.
எழுத்தொரு தவம் நானதைச் செய்கிறேன்.
என்னெழுத்து பலரை ஈர்த்து அணைக்கிறது.
00
கோவைப் பதியில் (கோப்பாய்) நன்கு மலர்ந்து
டென்மார்க் வரை பறந்து பாய்கிறது
வெல்லும் இவ்வுணர்வுக் கவிதைச் சிறகுகளின்
வீரியப் பரம்புதலில் உயரப் பறக்கிறது.
00
கன்னல் கரும்பென நானெண்ணும் எழுத்து
என் புலன் உயிரிற்குள் புகுந்தது.
கன்னங்கரு இரவிலும் வெள்ளி தங்கமாய்
மின்னும் பகலிலும் குமிழ்களாய் எழுகிறது.
00
என்னெழுத்தின் கவர்ச்சியில் நானே மயங்குவேன்.
சின்ன அகக்காயமும் வானவில்லான எழுத்தாகும்.
வன்னிகை (எழுதுகோல்) சுமையல்ல – சுகமான சுமை
வன்னம் (தங்கம்) எழுத்திற்கு பரிசு புகழுண்டு.
00
சுந்தரக் கடல் எழுத்து தந்திரமோ
மந்திரமோ அல்ல மன விதைகள்
முந்திய வள்ளுவன் வாழ்வின் குறளும்
அந்தக் கம்பன் தமிழும் எம்
நிரந்தர சிறகாக்கிப் பறந்திட ஆசை.
நினைத்திடு எழுத்து ஒரு சூரியன்!
நிரந்தர ஏர் சமூகத்தை உழுதிட!
பரந்த பிறப்பிற்கு உயிர் தருவது.
00
வேதாவின வலை 2 எழுத்துத் தொடரில் வரும் வரிகள்
22-3-2022
*
*
தென்றல் தீண்டி என்னைச் சீண்டி
கன்றல் நினைவுகள் கழன்றிடத் தூண்டி
மன்றம் நெருங்குதே மகிழ்வு வேண்டி
அன்றிலாய் மனம் பறக்குதே ஏண்டி!
*
மன்னன் வருவான் மனது நிறைப்பான்
அன்னம் எனது ஆசைகள் தீர்ப்பான்.
இன்னும் அழகை வேண்டி நிற்பான்
சின்னது பெரிதாய் மாலைகள் தொடுப்பேன்.
*
எந்த மலரும் மனது மயக்கும்
இந்த மணமும் நன்மை பயக்கும்.
சிந்தும் இன்பம் பெருக வைக்கும்.
முந்தி அவனை நெருங்கச் செய்யும்.
*
மாங்கல்ய பாக்கியம் தந்த அம்மனுக்கு
மகிழ்ந்து தொடுக்கும் மாலை சாத்துவோம்.
கண்ணன் வந்து காலாறிய பின்
கடிதே நாமும் கோயில் செல்வோம்.
*
காத்திருந்த காதல் கனிந்தமைக்கு நன்றி.
கருத்தாய் இணைந்து கல்யாணம் காப்போம்.
இன்னலற்ற இனிய இணைகள் என்று
பூரித்துப் பெருமையாய் புன்னகைக்காதோ பூக்கள்!….
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 22-8-16.
*
*
*
*
மனம் கிளறும் சொல்லாகத் தலைவிதி
கனமேறிக் களைக்கும் போது விதியிது
என விடை கண்டமைதி கொள்கிறோம்.
இனம் கண்டு பரிகாரம் தேடணும்.
இல்லை விதியை மாற்றலாம் என்பவன்
வினை நிறைத்துப் பாதை மாற்றுகிறான்.
படித்து உயரும் நினைப்புச் செயலாகி
வெடித்து விதி மாற்றும் திறனடைகிறது.
*
ஓர் இனிய காதல் புன்னகை
சீர் வெற்றியெழுதித் தன் காலடி
சோர்க்கும் ஓர் இனிய நந்தவனத்தில்
போர்த்தும் சுகந்தமும் விதி மாற்றும்.
தலைவிதி மொழிந்து கலையுணர்வை அடைக்காது
வலையுடையுங்கள் மூட நினைவகற்றி விழியுங்கள்.
இருட்டில் நீச்சலடிக்காது மின்சாரம் ஏற்றுங்கள்.
மருட்டும் எண்ணத்தை அகௌரவப் படுத்துங்கள்.
*
நிலை விதியலை நல்லதானால் உள்ளே
தலைவிதியெனும் குப்பை கொட்டுதல் அவலம்.
உயர்வு மேலும் உயரவே உன்னும்
உதவாத தலைவிதி கூறி உறங்கலேன்!
விளக்கினுள் விட்டில் பூச்சியாகாமல் மனிதன்
அளக்க வேண்டும் உலகை அது
பளபளக்கும் அவன் சாதனைப் புகழாகட்டும்.
மளமளவென அவனேறிட தலைவிதி கவிழும்.
*
வெற்றிக்கு மரணமில்லை வெற்றியின் பிரசவம்
சுற்றியுள்ளது எமது கையில். இதை
முற்றாகப் பலர் மறக்கிறார் பின்
சாற்றுகிறார் விதியென்று அதில் சாய்கிறார்.
துன்ப சுவடழித்து மலரும் மொட்டுக்கள்
துணை கொண்டு இன்பக் காட்சியைத்
துணிவுடன் உருவாக்கி ஊக்க நிலை
துல்லியமாய் எழுப்பி தலைவிதி சோகமழிக்கலாம்.
*
வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 21-8-16
*
*
*
காதலன் கண்ணீர் கரைபுரண்டோட
தாடியோடு போத்தல் கையிலாட
காதலை வெறுத்து அவனோட
காப்பிட வேண்டும் இந்நிலையோட.
*
கல்வி கையகப் படவில்லை
கருமமாற்ற காசு வசப்படவில்லை
கடவுளான பெற்றோர் தடமாகியும்
கடமைகளோடு வாழ்வு தொடருகிறோம்.
*
காதலனின் கண்ணீர் உலகில்
கார்வையாக காவியப் படகில்.
காதல் காயம் கடக்கில்
காரிய சாதனை சாதிக்கலாம்.
*
காதலன் கண்ணீர் காலத்திற்கும்
காதோரம் வடியும் கங்கையாம்.
காளையவன் முதுமையிலும் கலக்கம்
காஞ்சிரமாய் கசக்கும் கசக்கும்!
*
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-6-2016
*
*
*
1.
மலரே! மணத்தாலுன், நிறங்களால் மகிழாதார்
உலகில் ஏது மன்மத எழிலே!
மௌனம் சுகமென சாமரம் வீசுகிறாய்.
மல்லிகையில் மன்மத பாணம், தாமரையில்
தெய்வீகம், ரோசாவில் இராச சுகந்தமென
சொல்லி வைத்தது யார் மலரே!
2.
மலரே நீயொரு விலைமகள் தானே!
வலம் வரும் வண்டிற்குத் தேனீந்து
விலக்காது மயக்குவாய்! நீரின்றி வாடுவாய்.
மகரந்தச் சேர்க்கைக்கு மனமுவந்து உதவும்
சிகரமான மாபெரும் சேவகி நீ!
மனிதரை, மாயவனை மயக்கும் மலரே!
*
6-7-2017 வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.
(வேதாவின் வலை – கோவைக்கவியில்
– பாமாலிகை இயற்கை தலைப்பில்
30வது பூவும் வண்டும்.
74வது பூக்கடை தலைப்பிலுட் கவிதைகள் உண்டு.)
*