மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்.
மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்
மாநில மக்களுக்கு ஆசியிடும் அருள்தானம்.
பாதமிட பதினெட்டுப் படியுடைய புண்ணியதானம்
பதினெட்டு படிகளோ தங்கத்தகடாலான படிவம்.
பதினெட்டு மலைகளின் இடையிலான பக்திதானம்
பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை சந்நிதானம்.
பாவங்களழித்திட நாற்பத்தொரு நாட்கள் புண்ணியகாலம்
பிரமச்சாரி ஐயப்பனுக்கு இருமுடி தரிசனம்.
பாற்கடல் அமுதம் பகிர்ந்த மோகினியின்
ஆற்றல் நோக்கில் கவிழ்ந்தார் சிவன்.
தோற்றினார் ஐயப்பர் விட்டுணுவாம் மோகினியின்
வயிற்றிலொரு தேவ குழந்தைக் கருவாக.
மணிமுடி அரசர் பந்தள மகாராசா
மணிமுத்துப் பிள்ளை வரம் வேண்டினார்.
அணிசேர் பம்பாதீரத்தில் தெய்வக் குழந்தையாய்
மணிமாலை கழுத்துடைய பிள்ளையை வளர்த்தார்.
வளர்ப்பு மகனுக்கு முடி சூட்ட
வளர்த்த அரசி முரண் ஆகிட
வனைந்தாள் சூழ்ச்சி தனக்கொரு நோயென்று
வளப்பம் தருமாம் புலிப்பால் என்று.
எவரும் தேடவியலாப் புலிப்பாலுக்காய் எல்லாமறிந்தும்
எழுந்து காடேகினான். மகிசியாம் அரக்கியையும்
எதிர்த்துக் கொன்றான். புவிக்கு மணிகண்டன்
உதித்த காரணமும் நிறைவு பெற்றது.
புலிவாகனமாய் இந்திரன் மாற தேவர்கள்
புலிக் கூட்டமாக நாடேகினார் மணிகண்டன்.
கிலிகொண்ட இராணி உண்மையை யுரைத்தார்.
வலிவாம் தவமியற்ற ஐயப்பன் சபரிமலையேகினான்
14-6-2018