*
*
*
எனது முதலாவது வலையில் கவிதை பாருங்கள் தலைப்பில்
105 ஆக்கங்கள் போட்டோ வரிகளாக உள்ளது.
இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
மிக்க நன்றி.
*
*
11. நாம் உதைத்தாலும் அகழ்ந்தாலும்
எம்மை ஏற்றுத் தாங்குகிறது
பூமித் தாய்மை
*
12. கோழிக்கூட்டிற்குள்ளிதமான வரவேற்பு.
குழந்தையின் மகிழ்வு..
குளிர்காலம். 26-2-2018
*
*
*
என்னுயிரோடுருகிய மென் காதல் மலரெடுத்து
இன் கவிதைத் தோரணம் கட்டு.
தென்றலாய்த் தவழ்ந்து உலவும் நளினம்
மென்னிலவம் பஞ்சாய் நெஞ்சோடு இணையட்டும்.
*
உன் காதலுணர்வு இப்படியே பிணையட்டும்.
இன்பத்திலிரு இதயங்கள் ஊஞ்சல் ஆடட்டும்.
வன்முறைகள் விலகி, தூர மறையட்டும்
இன்னிசை மெல்லினங்கள் மட்டுமே இழையட்டும்.
*
திலகமிடும் வெற்றி வாழ்வு நிறையட்டும்.
விலகிடாத பந்தம் விரவி மணக்கட்டும்.
கலகமில்லாக் காதல் காலத்தில் இறுகட்டும்.
உலகத் திருவிழாவை நம் காதல் எட்டட்டும்.
*
பலமுடை நேசத்தைப் பகிர்ந்து உறவாடுவோம்.
குலவும் அழகில் குவலயம் வியக்கட்டும்.
நிலவும் அன்பில் உதாரண இணையாக
உலாவி மகிழ்ந்து உன்னதம் காண்போம்.
*
வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.1-2-2018.
*
*
ஆதித் தமிழ்க்குடி அறவழிக்காரர், ஆத்மஞானி
ஆற்றலுடை பேராசிரியர், இயற்றமிழ் வல்லவர்
அறிவியற் கலைஞர், சங்கத் தமிழில் சிறந்தவர்.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்வளர்ச்சிக் கருவாளர்.
*
தம்பதிகள் சாமிக்கண்ணு கண்ணம்மா புதல்வர்.
தம்பிப்பிள்ளை இயற்பெயர். நோய் வாய்ப்பட
தமிழ்க்கந்தனருளால் (கதிர்காமம்) குணமாகியதால் மயில்வாகனன்.
தாய்மொழிக் கல்வி, அறிவியற் கல்வி வித்தாளரிவர்.
*
மயில்வாகனமென்ற விபுலானந்தர் கிழக்கிலங்கை அவதாரர்.
மரபு வழிக்கல்வி காரைநகரில் ஆரம்பம்.
மதுரைத் தமிழ்சங்கம் முதலிலங்கைப் பண்டிதர். (1916)
முதலாவது இலங்கைத் தமிழ்ப் பண்டிதருமிவரே.
*
வித்தகப் புதையல், மனுகுல நேசிப்பாளர்
உத்தமமாகப் பயிற்றப் பட்ட ஆசிரியரிவர்
தித்தித்த தமிழாராய்ச்சியிறுதியில் இசைத்தமிழ் ஆராய்ச்சியானது.
அத்துடன் நாடகத் தமிழ் நல்லாசிரியருமானார்.
*
முதல் தமிழ்ப்பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழுகம் 1931
முதல் தமிழ்ப்பேராசிரியர் இலங்கைப் பல்கலைக்கழகம் 1943.
மொழி பெயர்ப்பாளர், பல்துறைசார் பேரறிஞர்.
முதியோர், பாலருக்கும் பாடசாலைகள் அமைத்தார்.
*
பாடசாலைகளின் முகாமையாளர், இதழாசிரியர், விஞ்ஞான
பட்டதாரி, கல்விக் கண்திறந்த கல்வியாளர்
பன்முகத் திறமையான வரலாற்று நாயகரால்
பங்குனி 29 – 1892ம் நாள் பெருமையுற்றதிவர் பிறப்பால்.
*
‘ பிரபோதசைத்தன்யா’ எனும் நாமம் துறவறப்
பயிற்சியில் சென்னை இராமகிஷ்ண மடத்தால்
பிரம்மச்சரியத்திற்காகப் பெற்றார். அதே சித்திராப்
பௌர்ணமியில் 1924ல் சுவாமி விபுலானந்தரானார்.
*
பெருமைக்குரியவர் யாழ்ப்பாணத்தில் காந்தியை வரவேற்றார்.
பண்டித பரீட்சைகளை ஆரம்பித்து வைத்தார்.
பல்கலைக்கழகம் சென்னை தமிழ் ஆராய்ச்சித்துறை
பாடத் திட்டத்தினைத் தயாரித்த பெருமையாளர்.
*
ஞானோபதேசம் பெற்ற குரு நினைவாக
மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் தொடங்கினார்.
இச் சமூகத் துறவித் தொண்டாளர்
இந்தியாவில் யாழ்நூல் 1947ல் அரங்கேற்றினார்.
*
அதனிரு கிழமையால் தமிழ் கூறு
நல்லுலகப் பணியாளர் இறைவனடி சேர்ந்தார்.
இலங்கைத் தேசியவீரர்கள் வரிசையிலிவர் உள்ளார்.
இலங்கைத் தமிழ்மொழிதினம் இவரது மறைவு நாள்.
*
வேதா. இலங்காதிலகம்ஓகுஸ்,டென்மார்க். march 2017
*
1.கோடைகாலப் புயல் காற்று:-
விடுங்கள்! யாரது!
என்னைப் பலமாகத் தள்ளுவது!
புயல் காற்று.
2. நட்சத்திரங்கள்.:-
இத்தனை மின்குமிழிகளையிட
எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள்!
மின்னும்நட்சத்திரங்கள்.
3. மாலைப்பனி:-
வைத்தியர் வரவில்லையே!
யாரித்தனை ஊசிகளேற்றுவது!
மாலைப்பனி.
4. உறை பனி:-
குழந்தை ஆவலாக ஓடியது
மூடிய துணியை இழுக்க
உறைபனி
5. வானவில்:-
அம்மா நிறங்கள் வாங்கவில்லையா?
அதையெடுத்துப் பூசட்டுமா?
வானவில் நிறங்கள்.
( 5 – மேலே ஒன்று ஆறு)
15-2-2018. வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.
*
*
திரு நிறைந்து சுகாதாரமாய்
திருக்காப்புடன் குறையின்றி வாழ்வதுவாய்
திருமணம் புகுந்தது கட்டுப்பாடாய்
ஒரு தாலி கட்டுவதாய்.
திருட்டி விழுந்தது போலாச்சு
திருத்தமற்று மதிப்பு இழந்தாச்சு.
*
திருமணச் சட்டம் தூசியாச்சு
ஒருமன எண்ணம் காணாமலாச்சு
திருவாசகமாய் திருமண வாழ்வை
ஒருவாசகமாய் வாழுமொரு மனதாளர்
அருமையாய் போற்றி வாழ்வோர்
பெருவாழ்வு வாழுவோருமுளர்.
*
திருவோடு ஏந்துவதாய் நீதிமன்றத்தில்
திருவமுதாக விவாகரத்தை வேண்டுவோர்
திருத்தம் சிறப்பென்று மறுமணத்தை
விருப்போடு தேடுகிறார் விதியென்று.
திருமணப் புனிதம் போற்றுதல்
அருமை நினைவு காத்திடுங்கள்.
*
பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 6-3-2016
*
திமிறும் மனைவியும் திணறும் கணவனுமாய்
திருமண வாழ்வொரு இறுகிய கட்டாய்
திடகாத்திரமிழக்கும் திசையறியா நிலையின்று
திவ்வியக் காட்சியாகவொரு திசை புரிகிறதா பாருங்கள்.
2017
இதே தலைப்பில் இன்னொரு கவிதை இதையும் வாசித்துப் பாருங்கள்.இதோ இணைப்பு:-
*
பெரு நம்பிக்கையில் காலூன்றும் எத்தனம்
ஒரு விடியலுக்காய் வெளிக்கும் கீழ்வானம்.
சுருளலை உருள்வின் பிரம்மப் பிரயத்தனம்
ஒரு விடியல் முயற்சியின் பூரண இலக்கணம்.
*
உருவாகும் ஒரு விடியலின் தேடல்
கருவாகும் கனவு விதையினால் கூடும்.
ஆனந்த விடியலைத் தேடிடும் எதிர்பார்ப்பு
ஆழ்ந்த துயிலினால் கூடும் அமைதிப்பூ
*
ஆகாய மழைத் துளிக்கு ஏங்கும் தவிப்பு
ஆட்படும் விளைநிலத்து விடியலின் காத்திருப்பு.
ஓட்டினைச் சன்னமாய் உடைக்கும் தவிப்பு
முட்டையுள் குஞ்சு விடியலிற்கு உயிர்ப்பு.
*
வான்கடலில் சந்திரனிற்கு விடியல் தேவையில்லை.
அவன் மந்திர விடியலே கருக்கிருட்டு வேளை.
விண்ணிலே நட்சத்திரங்கள் விடியலைத் தேடி
கண் சிமிட்டி ஓடாது வான் தடாகத்தில்
*
இன்னும் மேலும் ஓயாது தேடு
நன்னெறி காத்து நாளும் ஓடு
உன்னைச் சுற்றியொரு ஒளி வட்டமியற்கையில்
பின்னுமுன் முயற்சியே பெருமாக்கம் விடியலுக்கு.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 16-2-2017
*
ஓ! கிராமியக் கவிதையா!.. மிக்க மகிழ்ச்சி.
சங்கத் தமிழ் குழுவினருககு.மனமார்ந்த நன்றிகளும்.
வாழ்த்தகளும் பங்கு கொண்ட கவிஞர் குழாமிற்கும்;
மிகுந்த வாழ்த்துகள். கிராமியக் கவிதை சிறப்புச் சான்றிதழ்.
*
*
வளமாய் அப்பா உழுதிடுவார்
நளபாகம் செய்து கட்டுச்சோறு
அளவாய் உனக்கும் கட்டிடவா
குளத்துக் கரையாலே வருவாயா
களத்து மேட்டிலே காத்திருக்கேன்.
*
அத்தை மகன் என்னை
சத்தியமாய் பெண் பார்க்க
சித்தம் கொண்டு வருகிறான்.
குத்தம் சொல்லாதேயென் மேலே
கூடிப் பேசிடுவோம் வந்திடுவாய்.
*
உன்னைக் கட்டிக்க ஆசைப்பட்டேன
என்ன சொல்வாய்! வருவாயா!
தென்னங் குற்றியில் அமர்ந்திருந்து
மின்னும் நீரிலே கால்களிட்டு
என்ன முடிவு சொல்வாயோ!
*
கண்ணைக் கசக்க விட்டிடாதே!
கண்ணாளம் கட்டிக்க சம்மதிப்பாய்
எண்ணி உன்னை ஏங்குகிறேன்
ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே!
களத்து மேட்டிலே காத்திருக்கேன்.
*
உன்னை மனசுல நெனச்சு
இன்னொரு வாழ்க்கை வேணாமே
சொன்ன பேச்சு மாறாமே
என்னை எடுக்க வருவாயாம்
சுகமாய் இனிக்க வாழ்வோமே!
( குற்றி – மரக் கட்டை)
*
6-3-2017. வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.
*
*
*
ஆசையோடு காத்திருக்கேன் என் அன்னமே!
மீசையையும் உன் ஆசைப்படி வளர்த்திருக்கேன்
பூசை வேளை நெருங்குதடி வந்திடுவாய்
மோசம் போக வைத்திடாதே செல்லமே.
*
முத்து மாலை வாங்கி வந்தேன்.
முல்லை மலரும் கட்டி வந்தேன்
இத்துணை தாமதம் ஏன் கிளியே!
ஓத்தையிலே காத்திருக்கேன் உனக்காக இங்கு.
*
சின்னாளம் படடிலே சிலுசிலுப்பாயா! நீ
சிவத்தைப் பட்டுக் காஞ்சிபுரம் கட்டுவாயா!
அன்னக்கொடி மாமியோடு துணை வருவாயா!
என்ன திட்டம் ஆவலிலே துடிக்கிறேனடி.
*
என்னவோ சொல்வேனென்று சொன்னாயே அன்று
இன்றாவது கூறுமொரு எண்ணம் உண்டா!
என்று சொல்வாய் வெகுவாகக் காத்திருக்கேன்
நன்று அது கலியாணச் சேதியாகுமோ!
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 26-2-2017
*