எங்கள் கோப்பாய் (கோவைப்பதி) கிளுவானை ஒழுங்கை வீடு. நான் 20½ வருடங்கள் வளர்ந்த வீடு முன் படிக்கட்டு. என் தம்பியுடன்.
மழை பெய்யும் போது விறாந்தையில் அமர்ந்து பார்க்கும் போது இப்படித்தான் தெரியும் – கிளுவானை ஒழுங்கை வீடு. இப்போது அது தரை மட்டம்.
அப்பு – எனது அப்பாவின் தந்தை – கண்ணாடியப்பா என்று அழைப்போம். அவர்களுக்குத் .தோட்டக் காணி உண்டு. அதில் மிளகாய்க் கன்று கத்தரிச் செடி தக்காளி என்று பல வகை நட்டிருக்கும். ஒரு 10 மணி 9 – மணி போல ” தோட்டத்திற்குப் போவோம் வாறியா பேபி ” என்று அப்பு கூப்பிடுவார். அங்கு போய் – கத்தரி – மிளகாய் – தக்காளி என்று பிடுங்கிக் கொண்டு வீட்டிற்கு வருவோம். அப்பு எங்கள் வீட்டிற்கும் கொண்டு போகத் தருவார் இது மிளகாய்த் தோட்டம்
தொலைத்தவை எத்தனையோ தொடர் 5ல் வரும் –……. இது முதலாவது கோவைக்கவி.வேட்பிரஸ்.கொம்ல் (வேதாவின் வலை) யில் உள்ளது. இதன் பின் கோவைக்கோதை. வேட்பிரஸ்.கொம் அதாவது வேதாவின் வலை.2ல் இங்கு மற்றத் தொடர்கள் உள்ளது. கதை நடந்த பாக்கியம் வாத்தியார் வீடு. மூத்தவர் பாக்கியம் ரீச்சர். நாவலர் பாடசாலையில் படிப்பித்தார். என்அப்பா சிறு சிறு வேலைகள் செய்தாலும் தந்தையின் தொழில் என்ன என்றால் கமக்காரன் என்றே எழுதும்படி கூறுவார். இதனால் தான் ஸ்கொலர்ஷிப் சோதனை என்னால்எடுக்க முடிந்தது. இது பாக்கியம் ரீச்சர் செய்வித்தார். அதனால் எனக்கு 3 வருட விடுதி வாழ்வு அனுபவமும் கிடைத்தது. தங்கை தங்கம் தங்கக்கா என்று அழைப்போம். இருவரும் காலமாகிவிட்டனர். பாடசாலை முடிய வீடு வந்து பின்பு இவர்களிடம் படிக்கப் போவோம். இவர்களது படத்தை பெற்றுக் கொள்ள இவ்வளவு காலம் எடுத்தது. அதாவது நான் படம் கேட்ட நபர்கள் சரியானவர்களாக ஒரு வேளை அமையவில்லையோ தெரியவில்லை. இங்கு சேலை உடுத்திருப்பவர் பாக்கியம் ரீச்சர். மற்றவர் தங்கக்கா.
இக்காலத்தில் பம்பரம் என்றால் பல வகைகளில் வந்துள்ளன. நமது பேரர் கள் வித விதமாக விளையாடுகிறார்கள். பார்க்க ஆச்சரியமாக உள்ளன. அன்றைய காலத்தில் சோடா மூடிகளுக்கு
நடுவில் துளையிட்டு ஈர்க்குக் குச்சியை நடுவில் சொருகிப் பம்பரமாக உருட்டுவோம்.
சோடா மூடியைச் சப்பட்டையாகத் தட்டியும் அப்படிச் செய்வோம். பம்பரம் உருளும் போது வண்ண மினு மினுக்கும் சொக்கலேட் கடதாசிகளை
நடுவில் ஈர்க்குச்சியில் சொருகி விட்டால் பம்பரம் உருளும் போது அழகாக மின்னும்.கிட்டத்தட்ட இப்படி இருக்கும்.
இன்னும் சோடா மூடியில் பல விளையாட்டுகள் செய்யலாம்.
இது தென்னை ஓலையில் செய்து விளையாடும் காத்தாடி.
(இது வேறாகத் தனியானது பிளாஸ்டிக்கில் செய்வது )
தென்னை ஓலையில் செய்து விளையாடும் காத்தாடி. கீழே படத்தில் உள்ளபடி 5வது மாதிரி கையில் பிடித்தபடி ஓடினால் காற்றுக்குச் சுழலும்.படத்தில் உள்ளது போல
தென்னோலையில் செய்து விளையாடும் ஊது குழல்.
இது தவிர தென்னை மாத்தின் இளம் பிஞ்சுக் காய்களைக் குரும்பட்டி என்று கூறுவோம். இதன் மூடிகளைக் கழட்டி விட்டு
இதற்கும் நடுவில் ஈர்க்குக் குச்சியைச் சொருகி பம்பரமாக உருட்டுவோம். இதற்கும் வண்ண சொக்கலேட் கடதாசி உதவும்.
பம்பரம் தவிர இப்படிச் செய்து விளையாடுவோம். நடுவில் இலையையும் வைத்துத் தைப்பது போல பாவனை செய்வோம்.
இதை உருட்டும் சத்தம் தையல் மெசீன் தைப்பது போல, கேட்கும்.
தேர்
தேர் செய்வோம். 5 குரும்பட்டிகள் தேவை. ஈர்க்குக் குச்சிகளை இப்படிச் சொருகி தேர் செய்வது. ஊரில் உள்ளஎனது நட்புகளைக் கேட்டேன். இப்படிச் செய்து
படம் அனுப்ப முடியுமா என்று. அனி விஐய் வவுனியாவில் இருந்துஇதைச் செய்து அனுப்பினார். அவருக்கு மகள் இருக்கிறார் அவருடன் சேர்ந்து இதைச் செய்து படம் எடுத்து அனுப்பினார்.
இவருக்கு மனமார்ந்த நன்றி. இது ஒரு நல்ல பொழுதாக அவர்களுக்கு அமைந்திருக்கும்.
நாம் இதில் கயிறு கட்டி,தேராக இழுத்து பீப்பி நாதஸ்வரம் ஊதி ( அதுவும் பூவரசம் இலையில்)மேளம் தட்டி ஊர்வலம் போனோம். இதில் கூட்டுறவு- ஒற்றுமை – விட்டுக் கொடுப்பு என்று பல சங்கதிகள் பின்னியிருந்தன.
அது மட்டுமா இன்னு நமது வயது வாலிபத்தையும் தொலைத்து விட்டோம். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் 2018ல் இலங்கை சென்ற போது டம்புல (றொக் ரெம்பிள்) கற்கோயிலுக்கு நடந்து போனோம்.
கற்பாறைப் பாதை உயர ஏற வேண்டும். நாமிருவரும் எனது தம்பியும் ஏறினோம். பாதி வழி வர எனது கணவர் கூறினார் இனி நான் வரவில்லை நீங்கள் போயிட்டு வாருங்கள் என்று. இந்த இடத்தில் அவர் ஓய்வெடுத்தார்
சரி என்று நாம் போனோம். பாதி வழியில் ஏறும் போது அங்கிருந்து சிகிரியாவைப் பார்க்க முடிந்தது. படத்தைக் காண்கிறீர்கள்.
நமது படங்கள் கொஞ்சம். நீங்கள் டம்புல றொக் ரெம்பிள் என்று கூகிளில் தேடுங்கள் ஏராளம் படங்கள் பார்தது மகிழ முடியும்.
இந்த அனுபவம் வந்ததும் எனக்கு நாம்இலங்கையில் கழுத்துறையில் இருந்த போது சிவனொளிபாத மலை சென்றது நினைவு வந்தது. நல்ல வேளை இளமையான போது அங்கு சென்றோம். சிங்கள நண்பர் ஒருவருடன் சென்றோம். இப்போதென்றால் ஏற முடியுமோ தெரியவில்லை.
இலங்கையின் நடுவில்இருக்கும் சிவனொளிபாத மலை சிங்களவர்களால் சிறிபாத என்று அழைக்கப் படுகிறது. 2243 மீட்டா உயரம் உடைய கூம்பு வடிவ மலை.
ஒவ்வொரு சமயத்தவரும் இது தத்தமது இறைவனின் காலடிச் சுவடு என்று நம்பி வணங்குகிறார்கள்.
1975ம் ஆண்டளவில் நாம் சிவனொளி பாத மலைக்கு ஏறினோம் பாதை படிகளாக சீமெந்து பூசியது போல பிடிக்கக் கம்பிகள் உதவியாக இருந்தது.
ஒரு சிறிய அறை அளவு சதுர இடம் மட்டுமே உச்சியில் இருந்தது.
இன்று கூகிளில் பார்க்கும் போது மிகப் பெரிய இடமாக உருவாக்கியுள்ளனர். இன்று எம்மால் ஏற முடியுமோ தெரியவில்லை. அன்றைய தருணத்திற்கு ஆண்டவனுக்கு நன்றி கூறுகிறோம்.
ஊரில் மரணம் நேர்ந்தால் அப்பப்பாவை ( அமரர் முருகேசு சுவாமிநாத ன் முன்னாள் நாவலர் பாடசாலை முகாமையாளர்) ஊர் மக்கள் பலர் சேர்ந்து ஒரு வண்டில் வாங்கி வைத்திருந்தார்கள். கண்ணாடியாலானது இதை சவ வண்டில் என்போம்.
ஆட்கள் உருட்டிக் கொண்டு சுடலைக்குப் போவது. பிணப் பெட்டியை உள்ளே தள்ளி மூடி சுற்றி வர அழகாக மாலைகளால் அலங்கரிப்பார்கள். பார்த்தால் குதிரை வண்டில் சாயலில் இருக்கும். நாங்கள் சிறுவர்கள்
குருவிக் குஞ்சுகள் போல ஆச்சி அப்பு வீட்டில் சுற்றிக் கொண்டு திரிவோம். முதலே ஆச்சி அல்லது மாமியவை கூறுவினம் வண்டில் எடுக்க ஆட்கள் வருவினம் என்று. வெளி விறாந்தையில் இருந்து பார்த்துக் கொண்டிருப்போம் பின்பு நாங்கள் தகவல் கூறுவோம் வந்து வண்டிலை எடுத்துக் கொண்டு போனார்கள் என்று. மாலையில் வண்டிலைக் கொண்டு வந்து படலைக்கு வெளியே நிறுத்தி விட்டுப் போவார்கள். எனது அப்பாவோ அல்லதுஅப்பாவின் தம்பிமார்கள், சித்தப்பாமார்கள் (குஞ்சியப்பா என்றே அழைப்போம்) கிணற்றிலிருந்து வாளியில் நீர் கொண்டு வந்து வண்டிலை உள்ளும் புறமும் கழுவி விட்டு, படலை திறந்து உள்ளே உருட்டி வந்து இதற்கென உருவாக்கிய கொட்டிலில் நிறுத்துவார்கள். சிறுவர்களாக இருக்கும் போது கொட்டிலுக்குக் கிட்ட போகவே பயம். பிறகு வளர வளர தம்பிமாரையும் கையில் பிடித்துக் கூட்டிப் போய் சுற்றிப் பார்ப்போம். எமது வீடும் அப்பு ஆச்சி வீடும் 500 யார் தூரம் தானிருக்கும். பெரிய வளவுகள், பல மரங்கள் இலுப்பை மரங்கள்,
வேப்ப மரங்கள், வேப்பம் பழம், ஒரு வித சுவையுடையது.வேப்பங் கொட்டை –
வேப்பங் கொட்டைகள் நுளம்பை விரட்ட புகை போட பாவிப்போம். வேப்பம் பூவில் வடகம்
செய்து உண்ணலாம். மிக ஆரோக்கியமானது.
வேப்பங்காற்று மிக ஆரோக்கியமானது. வேப்பம் இலையை அரைத்து புண்களின் மேல் பத்து போட்டால் குணமாகும். இப்படி எத்தனை பயன்கள்!….
புளிய மரங்கள். (up)
புளியம்பழம் சேகரித்து வீட்டுப் பாவனைக்கு புளியைப் பாவிப்பது. புளியம் இலை சிறந்த வலி நிவாரணி. கொதிக்க வைத்த நீரில் புண்கள் கழுவலாம். நிழலுக்கு தெருவோரங்களில் நட்டு பயன் பெறுவார்கள். புளியை நீரில் ஊறவைத்து பிசைந்து கொட்டை நீக்கி, பாணியாக பாயிலே பரவி வெயிலில் காய வைத்து நன்கு உருட்டி , பானையில் சிறிது உப்பும் தூவி சேகரித்து வருடக் கணக்காகப் பாவிப்பார்கள்.
முருங்கை மரங்கள், (up)
முருங்கையிலை, முருக்கைக் காய் சமைத்து உண்ணலாம். முருஙகைக்காய் குளம்பு, கறி எனக்கு மிகப் பிடித்தமானது. மிக ஆரோக்கியமானது.
பனை கற்பக தரு என்போம். ப னம் பழம் சுவையானது அதன் கழி எடுத்து வெயிலில் காய வைத்துப் பதப்படுத்தி பனாட்டு செய்வார்கள். இளமையான நுங்கு என்பது மிகச் சுவையானது. பனை ஓலைகள் மாடுகளுக்கு உணவாகப்பாவிப்பார்கள். வீட்டுக் கூரை வேய, வேலிகள் அடைக்க உதவும். பனங்கொட்டைகள் பாத்திகட் டி மூடினால் முளைத்து பனங்கிழங்கு உருவாகும்.
(எமது பனை வளவு முன்பு இப்படித்தான் இருந்தது. . இப்போது கட்டிடக் காடு ஆகிவட்டது.) இவையும் மிகச் சுவையானவை. பனை மரத்தில் கள்ளு எடுத்து குடித்து மகிழ்வார். வெறி வந்து சண்டையும் பிடிப்பார்கள்.கீழே வரிசையாக நிற்பது பனை மரங்களே
இப்படியாக எத்னை மகிழ்வுகளைத்தொலைத்து விட்டு நிற்கிறோம்.
இங்கு குரோட்டன் வகைகள் 32 ஆகப்பெருக்கினேன். வேலியோரங்களில் இருந்தவை போக மிகுதியை தேயிலைக் கன்றுகள் நட்டு உருவாக்கும் நர்சரி முறையில் சிறு பொலிதீன் பைகளில் மண் நிரப்பி நட்டு வளர்த்தோம்.
தேயிலை நர்சரி இப்படித்தான் இருக்கும்.
அது போல குரோட்டன்களை நட்டு வளர்த்தோம். சில குரோட்டன் வகைகள். வீட்டுத் தாள்வாரம் சீமெந்தால் கட்டி மழைநீர் வடிந்தோட வாய்க்காலும் சீமெந்தில் இருக்கும். முதல் மூலைப்படத்தில் தெரிகிறது.
அந்த ஓரமான திட்டில் அடுக்கி வைத்திருப்போம். வீட்டில் உதவிக்கு ஆள் இருப்பதால் வசதியாக இருக்கும் தோட்ட வேலைகளிற்கு. சில மாலை நேரங்களில் காக்காப் பள்ளம் என்ற இடத்திற்கு நடந்து போவோம். ஒரு தடவை எடுத்த படங்கள் இவை. சிலர் இங்கு குளிப்பதும் உண்டு.
30 – 35 வருடங்களிற்கு முன்னர் எடுத்த படங்கள் இவை.
பிள்ளைகள் பிறந்து வளர்ந்ததெல்லாம் முன்னிருந்த வீட்டில். இங்கு விடுமுறைக்கு வந்து போவார்கள். சில வித்தியாச இலை மரக்கன்றுகள் காண்கிறீர்கள்.
கீழே நான் சேலை உடுத்த படம் மல்லிகைப் பூ பிடுங்குகிறேன். மாலை நேரங்களில் மல்லிகை தலைக்கு வைத்த காலம் அது. எவ்வளவு இன்பம் அள்ளினோம் அங்கு.
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான வாழ்வு. ஆண்டவனுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.
முன்னைய இடத்தில் வாழ்ந்தது போல அத்தனை வசதியும் இங்கும் இருந்தது.
தென்னை மரங்கள் அதிகமாகவும்
ஒரு பென்னம் பெரிய ஈரப்பலா மரமும் மேலதிகமாக இருந்தது.
ஈரப்பலாவில் கறியும் பொரியலும் செய்யலாம். அவித்த ஈரப்பலாவை சிறு சிறு சீவலாக்கி வெயிலில் காய வைத்து சீனிப்பாணி காய்ச்சி காய்ந்த சீவல்களைப் போட்டுக் கிளறினால் நல்ல பணியாரமாக வரும் சுவையும் நன்றாக இருக்கும். இதுவும் சிங்களத்தில் பிரபலம்.
பழைய வீட்டில் போகன்வில்லா பலவகை நிறங்களில் உருவாக்கியது போல இங்கு ஐந்தூரியம் மலர் செடிகள் உருவாக்கினோம்.
பலவகை நிறங்கள், பச்சை நிற ஐந்தூரியமும் இருந்தது. எனக்கு ஆச்சரியம். இலங்கை பேராதனைப் பூங்காவில் பச்சை நிற மலர் கண்டேன். தேங்காய் உரித்த தும்புகள் உரமாகப் போடுவோம்.
பழைய இடத்தில் நாங்களாகவே சீமெந்தில் பூச்சட்டிகள் செய்து பாவனைக்கு எடுத்தோம். பல வகை அச்சுகள் செய்து உருவாக்கினோம்.
இப்படியாக. ஓரு சமயம் பூச்சட்டியில் இருந்தவற்றை வரிசையாக நிலத்தில் நட்டும் பராமரித்தோம். ஐந்தூரியம் மலர்களின் மேல் இருந்த ஆசையால் தான் தொலைத்தவை தலைப்பில் எஸ்டேட் வாழ்வு தொடரானது.
அதை படத்தில் காண்கிறீர்கள். முற்றத்தில் பெரிய மாமரம். சுற்றி வர றப்பர் மரங்கள்.
இந்த முற்றத்தில் தான் முதன் முதலில் சொப்பர் சைக்கிள் ஓடினேன். கணவர் பின்னால் நின்று பிடிக்கிறேன் என்று கூற அந்த நம்பிக்கையில் நான் என்பாட்டில் நிதானமாக ஓடினேன். அவர் உதவி செய்யாமலே நான் சைக்கிள் ஓடினேன். பின்பு மாலை நேரங்களில் சில நாட்களில் சைக்கிளில் ஒரு உலா செல்வது வழமையானது.
பலவகையான அழகிய இலைகள் உள்ள செடிகளும் வளர்த்தோம்.
இதில் காணும் அனைத்தும் எம்மிடம் இருந்தது.
போகோனியா (Bogonia ) எனும் வகை செடிகளும் வளர்த்தோம். இதுவும் புது விதங்கள் எங்காவது கண்டால் கணவர் கொண்டு வந்து தருவார். பலவகைகளாக வளர்த்தோம். உதாரணத்திற்கு சிலவற்றைப் படத்தில் காண்கிறீர்கள். மிகுதியை அடுத்த அங்கத்தில் தொடரலாம்.
காய்கறிகளும் பழங்களும் இப்படியாக இருக்க பூச்செடிகளும் ஒரு பக்கம். ரோஜாக்கள், மணிவாழைகள்,
போகன்வில்லாக்கள், குறோட்டன் வகைகள் என்று பல வகைகள் ஒவ்வொரு இனத்திலும் தேடி உருவாக்கினோம். எனது பூக்கன்றுப் பைத்தியத்தைத் தெரிந்து இவர் போகும் இடங்களிலும் எனக்குக் கிளைகள் வாங்கி வந்து தருவார். நட்டு உண்டாக்க.
போகன் வில்லா வெள்ளை, சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு என்று பல வகைகள் இருந்தன. அப்போது என் தம்பி த பினான்ஸ் கம்பெனியில் கொழும்பில் வேலை. மாதம் ஒரு தடவை வருவார். வீடு உல்லாசப் பயணக் கொட்டகை போல உள்ளது அக்கா என்பார். வீட்டின் முன்புற புல் வெளியில் நின்று பார்த்தால் கீழே
தேயிலை மரங்கள் மட்டமாகவும் நிழலுக்கான மலேசியா மரங்களும் தெரியும். ஓரு பொம்மையை தேயிலைச் செடியில் வைத்தால் அப்படியே உருண்டு போய் கீழே விழுவது போல தேயிலைச் செடிகள் மட்டமாக இருக்கும். நானும் இவரும் கடைக்குப் போய் நடந்து வரும் போது தேயிலை மரங்கள் மட்டமாக இல்லாவிடில் இது சரியில்லையே என்பேன். அடுத்த நாள் நல்ல மட்டமாகச் செய்ய ஆட்களைப் போட்டு அந்த மலையையே திருத்துவார்.
அப்போதே நல்ல விமர்சிகையாக நான் அங்கீகரிக்கப் பட்டுள்ளேன்.
16 ஏக்கர் என்று ஒரு பகுதி இப்படியான தோற்றமாக இருக்கும்.
வாகை மரத்தில் குற்றிகளாக முதலில் ஒரு குற்றி வீட்டுக்கு வந்தது. அதை நிறம் தீட்டினேன் அழகாக இருந்தது. பிறகு தொழிலாளரைக் கொண்டு வெட்டி தந்தார் 5 குற்றிகள் வித்தியாசமாக நிறங்கள் தீட்டி பூச்சட்டி வைக்கவும் வெளியே விநோதமாக அமரவும் பாவித்தோம்.
அக்காலத்தில் பிளாஸ்ரிக்கில் பல நிறங்களாக இருக்கைகள் வெளி வந்தன. ஒன்று 60 ரூபா இலங்கைப் பணமாக.
இது போன்றது அது. அப்போது அது பெரிய பணம் . ஆகையால் இப்படி ஒரு யோசனையாக நானே நிறம் தீட்டினேன். அழகுக்கு அழகும் பொருளுக்கு பொருளுமானது.
நாம் இங்கு மாறும் போது அதில் தம்பி இரண்டு எடுத்தார். அதனால் அதைப் படமாக இப்போது காட்ட முடிந்தது. இப்போதும் அவர் அதை வைத்திருக்கிறார். பின்பு என் கணவருக்குப் பதவி உயர்வு கிடைக்க பிரதான பிரிவுக்கு மாறினோம்.
எஸடேட் வீட்டிலிருந்து அதாவது விறாந்தையிலிருந்து முன் பக்கம் பார்த்தால் இப்படித் தெரியும்.
என் கணவரின் தாயார் கொக்கேனை எஸ்டேட்டில் உருவாக்கினார் ஒரு அம்மன் கோயில். இதற்கு கணவரும் நானுமாக ஒரு பிள்ளையார் சிலையைச் சீமெந்தில் உருவாக்கினோம். முதலில் அச்சு உருவாக்கிபின்பு உரு அமைத்தோம். இந்தப் படத்தில் தெரியும் சிலை தான் அது.
இவைகள் கழுத்துறை மாவட்டத்து தேயிலை, றப்பர் கொக்கேனைத் தோட்டத்து நினைவுகள்.
பழங்களுக்காக வாழைகள் நிறையவே இருந்தன. மாறி மாறி வாழைக் குலைகள் வந்த வண்ணமிருக்கும்.
அதே போல வாழைப் பொத்தியும் (பூவும்) சமையலுக்கு உதவும். முள்ளுக் கம்பி வேலியோரம் அன்னாசி முளைகளை ஊன்றுவோம். அதுவும் எப்போதும் பழம் தந்து உதவும்.
அன்று நாம். பின்னால் தெரியும் வாழைகள்.
கசுக்கொட்டை மரமும் அதற்குரிய காலத்தில் கசுக்கொட்டைப் பழமும் தரும்.
பப்பாளி மரங்கள் அடிக்கடி பழம் தரும் மறந்தால் காகம் கொத்தி காட்டித் தரும்.
லாவுள் பழம் அதன் காலத்தில் பழம் தரும்.
கோப்பி மரம் வேலியோரம். கோப்பிப் பழம் நன்கு பழுத்தால் மிக சுவையாக இருக்கும்.சுவைத்துள்ளேன்.
கோப்பிப் பூ மிக வாசனையாக இருக்கும்.அழகாகவும் இருக்ககும்.
கோப்பிப் பழங்கள் பிடுங்கி வெயிலில் காயவைத்து உரலில் இடித்து தோல் போக்கி நாமே தயாரிப்போம் கோப்பித் தூள். எனக்கு நல்ல நினைவு ஒரு தடவை கோப்பி விற்ற காசில் இவருக்கு ஒரு ரிசேட் வாங்கியது.
பலா மரங்களும் தன் காலத்திற்குப் பலாப்பழம் தரும்.
அது தவிர தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளரும் கொண்டு வந்து தருவார்கள். பலாக் கொட்டைகளைப் பல வகையில் சமைக்கலாம்.
இதை அவித்து தோலுரித்து உரலில் துவைத்து தேங்காய்பூ சினி கலந்த உருண்டைகளாகப் பிடித்து மாலை நேரத் தேனீருடன் ருசிக்கலாம். பலாக்கொட்டைப் பொரியல் செய்யலாம். கறி வைக்கலாம். கொட்டையை அடுப்பில் சுட்டு உண்ணலாம்.
அதே போல முற்றிய பலாக்காயில் கறியும், பெரிதாக பலாச்சுளைகளை அவித்து தேங்காய் பூவுடன் கலந்தும் உண்போம். வெகு ருசி. பிஞ்சுப் பலாக்காயைத் தோல் சீவி கொந்தல் செய்து அதாவது மிகச் சிறு தூளாக வெட்டி வெங்காயம் மிளகாய் கடுகு பெ.ரும் சீரகம் தாளித்து அவித்து எடுத்தால் மிக சுவை. இது பொலெஸ் என்று சிங்களத்தில் வெகு பிரபலம். green jack fruit polos. மேலே சமைத்தபடி தட்டில் உள்ளது பொலேஸ்.சும்மாவும். சாப்பிடலாம் சோறுடன் கலந்தும் உண்ணலாம்.மிக சுவை. சில வீட்டில் சிங்கள் ஏழைகளிண் உணவாகவும் இருக்கும்.
வெற்றிலைக் கொடி வைத்திருந்தோம்.
தொழிலாளர்களுக்கு விற்போம். கோழிகள் வளர்த்து முட்டைகள் விற்றோம். தென்னை மரங்கள் இருந்தது. நமது தேவைக்குப் பாவிப்போம்.
இப்படியாக பணம் செலவழிக்காது ஒரு அருமையான வாழ்வு வாழ்ந்தோம். இன்றும் கனவில் அந்த வாழ்வு வரும். பசுமையானவை.
என்ற தலைப்பில் 12 அங்கங்கள் எனது இணையத்தளமான வேதாவின் வலையில் எழுதியுள்ளேன். ( https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B/) இரண்டாவது வலையாக இங்கு வேதாவின் வலை.2 ல் 13வது அங்கமாக இதைத் தொடருகிறேன். இலங்கையில் கலவர பூமியான கழுத்துறை மாவட்டத்தில் சிங்களம் பிரதான மொழியான இடத்தில் நான் திருமணமாகி வாழ்வைத் தொடர்ந்தேன். என்ன கதை சொல்லப் போகிறேன் என்று எதிர்பார்ப்பா!…இல்லை…..இல்லை….ஐந்தூரியம் மலர்கள் நினைவு வந்தது. எனது தோட்டக்கலை அனுபவங்களை எழுதலாம் என்ற சிந்தனை என்னைத் தூண்டியது. அழகிய தேயிலைத் தோட்ட வாழ்வு 750 ஏக்கர் நிலப்பரப்பில் நடுவிலொரு சிறு வீடு இரு படுக்கையறைகள், இருக்கையறை, சமையலறை சுற்றிவர தோட்டம். இயற்கை மழையால் பூக்கன்றுகளிற்கு நீர் விடத் தேவையற்ற சுவாத்தியம். வீட்டிற்குத் தேவையான சமையல் காய்கறிகள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை.
பொன்னாங்காணி, பசளி கீரை, சிறுகீரை, வல்லாரை மழை பெய்தால் தானாகவே வளரும்.
இதே போல முருங்கை மரக் கீரை, முருங்கைக் காய் என்றும் தானாக வளர்ந்த மரங்கள்.
கறிவேப்பிலை மரமாகவும் இருந்தது. தோட்டமாகச் செய்து கத்தரிக்காய், போஞ்சி, பச்சை மிளகாய், வட்டுக் கத்தரிக்காய் என்பன கிடைத்தன.
சட்டிக்கரணைக் கிழங்கு கிடைத்தது. இதன் கீரையையும் சமைக்கலாம் குருத்தான இலையாக.
இராசவள்ளிக் கிழங்கும் உருவாக்கினோம்.
மரவள்ளிக் கிழங்கு வேண்டிய அளவு வளர்ந்தது. மரவள்ளிக் கீரையும் சமையலுக்குப் பாவிப்போம். மரவள்ளியையும் பல மாதிரிச் சமைத்து உணவாக்க முடியும்.
ஈரப்பலா க் காய் – மரம் ஒன்று பெரிதாக இருந்தது . அதன் காலத்தில் இந்தக் காய்களை கறி சமைக்கப் பாவிப்போம். ஒல்லாந்தர் கொண்டு வந்து ஊன்றிய மரமாம் -இதன் படம் கீழே உள்ளது
இத போல பலா மரமும் இருந்தது; பலாக்காய் கறி செய்ய – பழம் உண்ணப் பாவிப்போம். –இதன் படம் கீழே உள்ளது.
பசியால் வாடும் ஏழை களவாணிப் பயல்கள், குடித்து விட்டுக் கூத்தாடுவோரும் , இரவில் இதை களவாகவும் பிடுங்கிப் போவார்கள்.
(இத்தனையும் பணம் கொடுத்து வாங்கி உண்ணும் காலம் இது. இலவசமாக இவைகளை அன்று பெற்ற காலம். நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். இப்படி ஒரு வாழ்வு அன்று ஆண்டவனுக்கு நன்றி.)