பிழைக்கும் கவித்துவம்…
நந்தவனப் பூ மெத்தையில் சிறு நதி ஓரத்தில்
சொந்தம் யாருமின்றி இயற்கையை மிக விரும்பி ரசித்தல்
வண்டுகள் ரீங்காரித்துப் பறக்க வண்ணத்துப் பூச்சிகளும் சிறகசைக்க
கண்டிட முடியாத் தென்றலை உணர்ந்து குளிர்மையை ரசிக்க
எவரமைத்தார் இந்த நந்தவனத்தை! அருகினில் ஒரு இதம்
கவருகின்ற தென்னை மரச்சோலையும் பறவைகள் ஒலியும் பரவசம்!
பொல்லாக் காற்று இல்லாததால் தென்றலும் மெல்லிசைக் கடை
தொல்லையில்லா ரசனை! கவிதை பொங்கிட ஏது தடை!
தலையசைத்த மலர்கள் வாசனையை இதயத்துள் மெதுவாகத் தூவின
தலை ஆட்டும் தென்னோலைகள் சில தேங்காய்கள் தந்தன.
தனிமை இல்லையே! எங்கோ போனது! வண்டுகள் ஓசையும்
இனிமை சேர்க்கச் சோலை நிழல் காட்டியது கோலம்
குழலோசை ஒன்று குயிலோசையாய் தவழ மயக்கம் வந்தது.
உழவுமழையாய் உள்ளத்தில் பொழிந்து அரங்கத்தில் அமருமுணர்வு கூட்டியது
ஆகா! அற்புதம்! என்னே இயற்கை! எழுதலாம் எழுதலாம்
சாகா வரிகள்! பிழைக்கும் கவிஞன் திறமை என்றும்!
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க 17-8-2015