*
வந்தியத்தேவன் குந்தவி காதல்.
*
காசிப்பட்டு மென்மை கண்ணில் போதை
காட்டுத்தேனின் இனிப்பும் கார்காலத்து மின்னல்
வெட்டுமான ஒரு பெண்ணின் குரல்
குந்தவி:- ஆனைமலைக் காட்டிற்குச் சென்று வந்த
வரலாறு கூறும் போது பேச்சை
அடிக்கடி நிறுத்தி, மேலும் கீழும்
பார்த்து பேச்சைத் தொடர்ந்தது எதற்காகவோ!
வந்திய..:- புனைகதையல்ல இது. என் பேச்சுத்
தடைக்கு வேறு காரணம் உண்டு.
குந்தவி:- பெண்களிடம் கூறக் கூடாத
பெருமிரகசியமோ அது!
வந்திய..:- ஆம் தங்களிடம் மட்டும் கூறிவிடலாம்
அனுமதி தந்தாலதையும் கூறுவேன்.
அரிய தங்கள் பெருவிழிகளின்
மாயம் என்ன!..விழிகளில் பதியும்
என் பார்வையைத் திகைத்திட வைக்கிறது
ஆயினும் சமாளித்துத் தொடருகிறேனே….
குந்தவி:- அரிய மாயமும் அதிசயமும் இல்லை
சிலகாலமாக மையிடவில்லை கண்களிற்கு
தம்முருவமென் கண்களில் தெரிந்திருக்கும்
அதுவே திகைக்க வைத்திருக்கும்….
வந்திய..:- என்னுருவை நான் தெளிந்த நீரில்
கண்ணாடியில் கண்டு திகைப்படையவில்லையே
குந்தவி:- கண்ணாடி மங்கும், நீர் கலங்கிடும்!
தங்களுருவம் எப்போதுமென் கண்களில் பொலியும்
அதிசயக்காரணம் தங்களிற்குத் தெரியுமா?
வந்திய..:- தெரியவில்வையே தேவி….
குந்தவி:- இப்பரந்த தேசத்தில் எனக்கான சுயம்வரம்
உருவானால், அரண்மனைத் தோட்டத்தில் என்னை
சந்தித்த அந்த அனாதை வாலிபன்
எங்கேயென்று தேடியவர் கழுத்தில் மாலையிடுவேன்.
(வந்தியத்தேவன் காதிலாயிரம் கிண்கிணிகள் ஒலித்தது.
பொன்மழை பொழிந்தது. வண்ணத்திப்பூச்சிகள் நடனமிட்டன.
எழுந்து நின்றான்)
குந்தவி:- நான் கூறுவது தங்களிற்குப் பிடிக்கவில்லையா?….
வந்திய..:- இது உண்மையா கனவாவென்று சோதித்தேன்.
உண்மையென உணர்கிறேன். தங்கள் மொழிகள்
அமுதுண்டவனாக என்னையாக்கி புத்துயிர் அளித்தது.
குந்தவி:- தாம் போகுமிடங்களில் பல அபாயங்கள்
வரும் போரிடுவீர்கள், தம்முயிருக்கு அபாயம்
விளைந்தால் இந்த சோழர்குல இளவரசி
மணமாக முன்னே கைம்பெண்ணாவாள் என்பதை
மறவாதீர்கள்!
வந்திய..:- அப்படி நேராது தேவி! நான்
அமுதம் அருந்தி அமரனாகிவிட்டேன். எங்கும்
என்னை வழிகாட்டும் துருவநட்சத்திரமாக
கலங்கரைவிளக்காக, பசுஞ்சோலை சீவநதியூற்றாகத்
தாங்கள் எனக்குதவுவீர்கள். எங்கு சென்றாலும்
திரும்பி வந்து தங்கள் கரம் பற்றுவேன்.
இது நிறைவேறும் வரை இயமன்
என்னை நெருங்கமாட்டான்.
(குந்தவை மெய்மறந்தாள். இந்த வீரன் இதை முதன்முறையாககக் கூறவில்லை. யுக யுகாந்தரங்களாகப் பல தடைவ இதை, இந்த விசித்திர சித்தப்பிரமையைக் கேட்டதாக உணர்ந்தாள்.)
19-7-2018-வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.
(இதை வசன கவிதை என்று சொல்லலாம். இதில் பின் பாதிக்கு சான்றிதழ் கிடைத்தது.)
*