3. நாலடியார் – அறிவுடைமை

 

*

நாலடியார்

25ம் அதிகாரம்

அறிவுடைமை – 3

எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா
தென்னாட்டவருஞ் சுவர்க்கம் புகுதலாற்
றன்னாற்றா னாகு மறுமை வடதிசையுங்
கொன்னாளர் சாலப் பலர்

எந்நிலத்து – எந்த நிலத்தில், வித்து இடினும் – விதை போட்டாலும், காஞ்சிரம் – எட்டியின், காழ் – விதை, தெங்கு ஆகா – தென்னைமரம் ஆக மாட்டா, தென்நாட்டவரும் – தென்திசையுள்ளவரும், சுவர்க்கம் புகுதலால்-(நல்வினைப்பயனால்) சுவர்க்கலோகம் சேர்வதினால், தன்-ஒருவனது, ஆற்றான் – முயற்சியினாலே, மறுமை- மறுமையில் நற்கதி, ஆகும்-பொருந்தும்: வட திசையும் – வட திசையிலும், கொன் ஆளர்-அறஞ் செய்யாது வீணே கழிப்பவர், சால பலர்- மிகவும் பலர் உளர்.

*
எனது வரிகள்:-

*

எட்டி மர விதைகளிட்டால்
எத்தன்மை நிலமானாலும்
தென்னை மரங்களாக முளைக்காது.
தென்னாட்டு வாசிகள், அது
இயமதிசையாதலால் சுவர்க்கம்
சேர்தல் அருமை, அவரும்
நல்வினைப் பயனால் சுவர்க்கம்
அடைகிறார்கள். வடக்குத் திசையில்
வாசிகள் அது புண்ணிய பூமி
என்பதால் சுவர்க்கம் அடைவாரெனும்
எண்ணத்துடன் நற் கதியடைய
முயற்சிக்காது வீணே காலம்
கழிப்பவர் பலர். அவரவர்
அறிவு, நற்செயல், முயற்சியாலன்றி
வாழும் நிலத்தால் நற்கதியடையார்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 31-5-2017

*

 

sca- eedddu

2. அறிவுடைமை (நாலடியார்)

 

நாலடியார்

*

அதிகாரம் 25 –  அறிவுடைமை

*

நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்      naladiyar
கணிகல மாவ தடக்கம்– பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரங் கூறப் படும்.

*

 

 நளி – பெரிய,  கடல் – கடலின், தண் – குளிர்ந்த, சேர்ப்ப – கரையுடைய அரசனே  நல் கூர்ந்த – வறுமையடைந்த,  மக்கட்கு – மனிதர்க்கு, அணிகலமாவது – அணிதற்குரிய ஆபரணமாவது, அடக்கம் – அடங்கியிருத்தல், பணிவுஇல் – அடக்கமில்லாத, சீர் – தன்மையில், மாத்திரையின்றி – அளவு இன்றி வரம்பு கடந்து நடக்குமேல் – ஒழுகுவானாகில்,  வாழும் . அத்தகையவன் வாழும் ஊர் – ஊரினரால், கோத்திரம் – தன் குலம், கூறப்படும் – இழிந்து சொல்லப்படும்.  என்றவாறு…

*

என் வரிகள்:

*

மகா சமுத்திரத்தின் தண்மை
மணற்தரையின் அதிபதியாம் மன்னனே!
கீழ்ப்படியும் குணம் பொருளில்
கீழ்நிலையாளரை வடிவாக்கும் நகை
கீழ்ப்படிதலற்று எல்லையின்றி மனிதன்
இயங்கினால் தன் சொந்தக்
குடியாளராலேயே இவன் குலம்
இழித்துக் கூறும் நிலையடையும்

*

 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
22-5-2015

*

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

1. அறிவுடைமை (நாலடியார்)

 

Billedresultat for palm leaves manuscript

*

நிறைமதியாளர்

*

அதிகாரம் 25 –   அறிவுடைமை

பகைவர் பணிவிட நோக்கித்  தகவுடையார்
தாமேயு நாணித் தலைச்செல்லார் காணா
யிளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா
தணங்கருந் துப்பி னரா. (நாலடி: 241)

அணங்கு – வருத்தம் செய்யும், அரு – கொடிய, துப்பின் – வலியுடைய, அரா – பாம்பு, இளம்பிறை – இளையபிறைச் சந்திரனாயிருக்கும் போது, திங்களை – சந்திரனை, சேராது – வருத்துவதற்கு நெருங்காது, (அது போல) தகவு உடையார் – தகுந்த அறிவுடையார், பகைவர் – தம்முடன் மாறுபட்டவர், பணிவு இடம் நோக்கு – தாழ்ந்து இருக்கும் காலத்தைக் கவனித்து, தாமேயும் நாணி – தம்மில் தாமே வெட்கமுற்று, தலைசெல்லார் – அவரை அடக்குதற்கு எதிர்த்துச் செல்லமாட்டார், காணாய் – இதனை அறிக.

*

எனது வரிகள்:-

*

முழுமதிச் சந்திரனையே என்றும்
பழுதுடை கிரகணம் பற்றும்
பிறை நிலாவை அதன்
குறையோடு கிரகணம் பற்றா
இவ் விதியாய் எதிராளியின்
திடமற்ற நிலைப்பாடில் பலவீனரை
அடக்கார்  எதிர்க்கார்  தம்முள்
குறுகும் நிறை மதியாளர். 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-4-2015

div138