கவித்துவமான நடனம்
(சௌமியமாக- அழகாக வான்வளம்-மழை மகாபதும-குபேரநிதி
சொர்ணக்கல்- வைடூரியம்.)
மௌன இடைவெளி அடைமழை
கௌரவமாய்க் கம்பீரமாய்க் கதைத்தது.
சௌகரியமாக முத்துக்களாய்ச் சிதறியது.
சௌமியமாக மாலையாக்கிச் சூடலாமோ!
பூரண அமைதியில் பூர்த்தியாய்
பூச்சிதறலான மழைப் பூசனை
பூமாதேவியை நீராட்டுதலாய்ப் பூவிதயத்திற்குப்
பூத்தல் உணர்வு போற்றுகிறது.
00
சொரியும் ”சோ”வென்ற சாரல்
சோர்விற்குச் சோபனப்பாட்டு சோடிக்கிறது.
சொர்ணக்கல் சொல் மாரியே
சோதனை ஓடச் சொற்பொழிவாற்றுகிறாயா!
00
ஈரமான காற்றை ஈகமாய்
ஈடற்ற வான்வளமாய் ஈங்கெறிகிறாய்!
தண்ணீர்க் கதவுத் தடுக்கு
தடங்கலின்றி நிறுவுகிறாய் தகதகவென.
00
மழைக்கரக் கொடை மொழிகள்
மந்திர உவகையேற்றும் மத்தளமோ!
மகத்துவப் புல்லாங்குழல் மயக்கம்
மகாபதும மனநிறைவே மனிதனுக்கு.
00
கவிச்சுந்தர நடையுள் கௌரவமாய்
கலந்து மொழியோடு கட்டுதலாக
கவிதை மழை கவிழ்வதுவும்
கவித்துவமானதொரு நடனமே காற்றினில்
00
வேதா. இலங்காதிலகம். – தென்மார்க் 5-10-2021