விலகாத ஞாபகக் கிடக்கைகள். நினைவுகளின் உயில் இது!
யாயும் எந்தையும் வலி கிழக்காரே.
யானும் ஈர்பதினொரு அகவைகள் செழிப்பான
செம்புலமாம் கோவையில் (கோப்பாய்) இனிது வாழ்ந்து
செம்புலப் பெயல் நீராய் நெஞ்சம் கலந்தேன்.
கம்பலம் (ஆரவாரம்) மிகு போர்நிலவரம் நிறைபாரமாய்
நம்பலமான கோவையை விட்டுப் புலம் பெயர்வு
தெம்பெல்லாமுறையும் குளிர் நாடாம் டென்மார்க்கிற்கு.
நகர்வு ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்தொன்பதில்.
இப் பிறப்பின் இணைப்பாம் தாய்மண்ணில்
தப்பின்றி மண்ணில் ‘ அ ‘ எழுதிய நினைவுதேசம்.
செப்பமாய் கோவை முத்தமாரியம்மனைத் தொழுது
வெள்ளி தோறும் கூட்டுப் பிரார்த்தனையில் கிரமமாய்த்
தேவாரதிருவாசகங்களோதி பக்தி படிப்பை அள்ளிப்பூசினேன்.
தெள்ளிய நினைவு கற்பகப் பிள்ளையார் கோவிலில்
திருமுருக கிருபானந்தவாரியார் சொற்பொழிவும், வேறெங்கோ
அருந்திய குன்றைக்குடியாரின் அறமொழிகளுக்குமப்பாவுக்கு நன்றி.
என்னப்பப்பா முருகேசு சுவாமிநாதர் கோவையில்(1910ல்)
பெண்களுக்காக சரஸ்வதி பாடசாலையை உருவாக்கினார்.
ஆண்களுக்கான 1872ன் ஆறுமுகநாவலர் பாடசாலையையுமிணைத்து
கோ.மத்தியகலவன் நாவலர் பாடசாலையாக்கி 1913ல் மனேஐரான
இங்கிவர் விரலிணைத்துச் சென்று ஆரம்பமானதென் கல்வி
பாடசாலையெதிரேயிவர்கள் வயல்இ உச்சி வகிடாக வரப்பு.
அழகுடனாடை மாற்றுதலாக இயற்கை தழுவிப்
பழகி நாளும் பதித்த பருவமென் சிறு வயது.
தரிசுநிலம் உழவில் பறவைகள் பூச்சிகளுண்ணும்.
விதைப்பு காகங்கள் விதைப்பவரைச் சுற்றிப் பறக்கும்.
வெள்ளம் வயலை நிறைக்க மறு கிழமை
கொள்ளையழகாய்ப்; பச்சை நெல்முளைகளங்கு நிமிரும்!
வளர்ந்து கதிர்முற்றும் கர்ப்ப வயல்!
விளைந்த நெல் அருவிவெட்டு சூடுமிதிப்பு.
கூலியாளருக்கு பிட்டு தேநீருடன் அப்பாவோடு
எத்தனை தடவைகளானந்தத் துள்ளல் நடை!
சீரான காட்சிகளிதயத்தில் பச்சைகுத்திய ஓவியம்!
பாடசாலையருகு மதகில் மழைவெள்ளம் மேவும்.
உள்ளே விளையாட்டிடத்தில் மீன்கள் துடிக்கும்,
இரவிரவாகக் கத்திக் களைத்த தவளைகள்
வயிறு வெடித்துக் கிடக்கும்! மச்சமுண்ணாத
எனக்கு அதைக் காண அவருப்பாயிருக்கும்!
அதிகாலையூர்வலம்! ஐல்ஐல்லென மாட்டு வண்டிகளில்
வாழைக்குலைகள், புகையிலை, வெங்காயம் மிளகாய்.
விளைந்த இயற்கைச் செல்வங்களுடன் கல்வியங்காட்டிற்கு
சந்தைப்படுத்த பயணிக்கும் ஊக்கமிகு காட்சி
அமரர் கோவை விவாகப் பதிவுகாரப் பெரியப்பா
வீட்டில்(சுப்பிரமணியம் சுவாமிநாதர் )துயிலும் போது
இவ்வனுபவம் அலாரமாக தூக்கத்திலிருந்து எழுப்பும்.
முதுமையேற இதயக்கிணற்றில் மின்னும் பாலநினைவுகள்
உயிரையெழுப்பும். கோவில்கள், தபாற்கந்தோர், சுடுகாடு,
நகரபாதுகாவலர் நிலையமென குறையற்ற ஊரன்றுமின்றும்.
பாடசாலை மாற்றம் புலமைப் பரிசில் பரீட்சையால்.
விடுதியனுபவம் ஸ்ரான்லி கனகரத்தினம் மத்திய மகாவித்தியலயம்.
பத்திலிருந்து மூன்று வருட முன்னேற்றமங்கு.
நடனம் நாடகம் இசையெனுமுலக விளக்கங்களள்ளினேன்.
வட்டார விளையாட்டுப் போட்டிகளில் செந்திரேசா
இந்து மகளிர், இராமநாதன் கல்லூரியென
பல நட்புகள்இ அறிமுகங்கள் உலக அறிவின்
விரிவு. பின்னர் கோவை கிறீஸ்தவ கல்லூரி.
வீட்டினருகில் பாடசாலை. கிராம சுகங்களழியாதது.
கிட்டுமானந்த மாலைகளோடு ஆடும் ஊஞ்சலது.
கோழியேன் முட்டையிடவில்லையேயென்று தேடினால் மாதமுடிவில்
வைக்கல்பட்டடையில் நாலாறுமுட்டைகள் குஞ்சு பொரித்ததும்
ஆச்சியோடு மாட்டுத் தொழுவத்தில் காவலிருந்து
பால் கறக்குமழகின் ரசிப்பும்! பாலைக் காய்ச்சியாடை,
தயிர்கடைந்து வெண்ணெய் உண்ணும் உருசியும்!
இன்றிங்கு வேறு விதமாக பெட்டிப் பாலில் நீந்துகிறோம்!
(வரிசை தப்பிய எறும்பாக நானும் – குமரிக்கண்டமான வலி கிழக்கு வாழ்வும் – ஆழ்கடலில் படமாக.)
ஆடி 2017.
வேறு
கடந்த காலம்.
அப்பா அம்மாவுடன் வாழ்ந்த காலம்
அன்பான இல்லத்தில் குலவிய காலம்
தப்பின்றித் தமிழைப் பயின்ற காலம்.
செப்பமாய்ப் பஐனைகள் பாடிய காலம்.
அப்பப்பா நினைக்கையில் இனிக்கும் காலம்.
எப்போதும் மறுபடி வராத காலம்.
கெந்திப் பிடித்துக் குதூகலித்ததும்
கொக்கான் வெட்டி மகிழ்ந்ததுவும்
கோலம் போட்டு இரசித்ததுவும்
கோணலின்றிப் பரீட்சைச் சித்திக்காய்
கோயிலில் தேங்காய் உடைத்ததுவும்
கோடிக்கும் பெறவியலா அநுபவங்கள்.
காலமெனும் நீள் அதிகாரத்தில்
கடந்த காலம் பக்கம் பக்கமாய்
கிடந்து சுளலும் மனதில் பசுமையாய்.
தொடர்ந்து அசைகிறது தொல்காப்பியமாய்.
தொடர் கதையின் முன்னதிகாரமிது.
தொகுப்பில் இணையும் சிற்றதிகாரமிது.
2017