காதல் வந்துவிட்டால்
அம்மா பத்துத் தரம் அழைக்கிறார்
இறுதியில் முதுகில் வந்து தட்டுகிறார்
எனக்குச் சுரணை வருகிறது. மனம்
முழுதும் என் காதலன் உருவே.
என்னங்க என்கிறேன். அம்மாவோ
அடியே நான் தானுன் அம்மா என்கிறாள்.
மன்னியுங்கள் ஏதோ நினைவு என்கிறேன்
காதல் வந்துவிட்டால்….இப்படியா!
மூன்றாம் மாடிக் குடியிருப்பாளி நான்.
தொழில் முடிந்து வீடு வருகிறேன்.
இரண்டாம் மாடிக் கதவை எனது
திறப்பால் திறக்க முயற்சிக்கிறேன்.
உள்ளிருந்து வீட்டுக்காரர் கதவு திறக்கிறார்
நான் திருதிருவென முழிக்கிறேன்.
மன்னியுங்கள் என்கிறேன்.
காதல் வந்தால் இந்தனை மறதியா!
சேலையை வெறுத்து ஒதுக்கினேன்.
நீண்ட கால்சட்டை அணிந்து சுற்றினேன்
அடிக்கடி இப்பொதெல்லாம் சேலையுடுக்கிறேன்.
கண்ணாடியில் அழகு பார்க்கிறேன்.
அம்மா ஆச்சரியமாய் பார்க்கிறாள்.
ஐய்யோ அம்மா நான் காதலில்
விழுந்துள்ளேன்: புரிந்து கொள்ளுங்களேன்.
எல்லாம் அழகாக இருக்கிறது
யார் ஏசினாலும் கோபம் வரவில்லை
உலகமே இனிக்கிறது.
சாமியை வெறுத்து நாத்திகம் பேசினேன்
அடிக்கடி இப்போது சாமி கும்பிடுகிறேன்.
அவரை எனக்குத் தா என்கிறேன்.
சேலை அணிந்து கோயிலுக்குப் போகிறேன்.
அவர் கோயிலுக்கு வருவாரா என்று
வழியை வழியைப் பார்க்கிறேன்.
அட! காதல் படுத்தும் பாடு அப்பப்பா!
5-7-2016