டென்மார்க் தமிழ் கலைஞர் சங்க விழாவில் 20-5-2018
இது கலைகளைத் தாலாட்டும் விழா.என்கிறேன் நான்.
கலைகளை, ஆக்கத்திறனை ஊக்குவித்து, இலைமறை காயின்றி ஆதரித்தல்.குலையாது நிமிர்ந்திட கௌரவித்தல்.. கௌரவிக்கவும் ஒரு மனம் வேண்டும். கௌரவிப்பது மட்டுமன்றி ஆவணப் படுத்த வேண்டும். விழாவிற்கு பொறுப்பாளர்களிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும். அடுத்து இங்கு தம் திறனை வெளிப் படுத்தும் அனைவருக்கும் வாழ்த்துகளும் இறையாசியும் உரித்தாகட்டும்.இங்கு கலையைப் பற்றி சிறிது கூறி ஒரு சிறு கவிதையுடன் உங்களிற்கு இடம் விடுகிறேன்.மற்றைய உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக் காட்டுவது கலை நுட்பமே.வரலாற்றுக்கு முந்திய காலக் கலைகள், அமெரிக்க, ஓசானிய, ஆபிரிக்க, ஆசிய , ஐரோப்பிய, சுதேசக் கலைகள் என்றும்பண்டைய உலகின் கலைகளாக மொசப்பத்தெமியா, சுமேரிய, பாபிலோனிய அசிரியக் கலைகளாகவும், எகிப்திய , ஏஜியன், கிரேக்க, ரோமம் என்று பலவகை.கலைகளைப் பல வகையாகப் பகுக்கலாம் நுண்கலை- நுண்ணிய திறன் உணர்வு கொண்டது. நடனம் கவிதை இசை..இதிலடங்கும்.பயன்கலை- இது கட்டிடம், திரைப்படக் கலையாகும்.அடுத்து பருண்மைக்கலை- இது பினாஸ்ரிக் ஆட் என்று கட்டிடம் சிற்பம் ஆகும்.கவின் கலை:- ஓவியம், ஒப்பனை ஏஸ்தெற்றிக் ஆட் என்பதாகிறது.நிகழ்த்துக் கலை பெர்போமிங் ஆடஸ்;- ஆடல் கூத்து நாடகம் .இதில் இசையும் அடக்கலாம். இவை முக்கியமானவை. இதில்எனது பாதை கவிதை.கவிதை இலக்கியத்தின் அரசி என்பர். இதுவே மூத்தது. நடுமையானது. இனி_____________________________________
கலை என்பது இனத்தின் அடையாளம்
நிலைவாழ்வின் எச்சம்
கலையொரு வெளிப்பாடு
உள்ளுணர்வின் சுதந்திரம்.
கலைகள் பண்பாட்டு ரீதியாக
பண்பாடு கடந்த ஓரழகிய மொழி.
இயந்திரமாய் இயங்கும் வாழ்வில் ஓர்
இதமான இயக்கம் கலை. உடலின்றி
இதயமும் இங்கிதமாய்க் கலக்கும் வேட்கை.
இன்னுமின்னும் என்று மனதை இயக்கும்.
வல்லமையின் உயிர் கலை நுட்பம்
நல்ல கற்பனையின் உள் எழுச்சி.
பல்லின விலங்கியலற்ற மானுட வேறுபாடு.
வெல்லும் அகன்ற வரையறை கொண்டது.
பதினேழாம் நூற்றாண்டு வரை கலை
பயனுடை திறமை அறிவியல் நுட்பக் கணிப்பாயிருந்தது.
பின்னாக அழகியல், கற்பனை திறமை
பயனுறு கலை – நுண்கலைகளாகவும் பகுக்கப்பட்டது.
கலையும் பல சமுதாயத் தாக்கம் தாங்கியது.
சிற்பமோவியம், ஒளிப்படம், கட்புலக் கலையாகவும்
சொற்பொழிவு, நடனம், நாடகமிசை தற்காப்புக் கலையாகவும்
அரங்காடல் கலையாகவும், கதை, கவிதை, கட்டுரை
நாடகவியல் எழுத்துக் கலையாகவும் உள்ளது.
இன்று ஊடகக் கலை நவீனமென்றுள்ளது.
அன்று ஆயகலைகள் அறுபத்துனான்கு என்றனர்.
நன்றான கலைவரலாறு கற்காலம் தொடங்கி
உலகின் பல நாகரீகங்கள் கலைவரலாறு உள்ளடங்கியதே.
சரித்திரச் சித்திரங்களிற்கு
கலைகள் சிறந்த ஆதாரம்.
தூரநோக்கக் கண்ணாடியுமாகிறது.
இதை இப்படிச் சிறிதாகச்
சொல்லி முடிக்க முடியாது.
கலை பெருங்கடல்.
வேதா. இலங்காதிலகம்.(இலங்கை) டென்மார்க் 24-5-2018