அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
(அன்றுதல் – சினத்தல். அன்றினார் – பகைவர்)
கன்னித்தமிழ் போல் கொடுத்தலும் எடுத்தலும்
கன்னலன்பிற்கு முடியும், குனிதலென்பதே யில்லா
குன்றி மணியன்பும் குன்றளவு பயனுடைத்து.
தன்னடக்கம் நிறையன்புச் செயற்பாடு, தன்னலமற்றது.
மன்பதையை மன்றத்தில் பெருமையாக்கும் நட்பாம்
பொன்னுக்கு நிகராமன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்!
அன்பற்றோருக்கு ஐம்புலன்களாலும் பயன் இல
என்புதோல் போர்த்திய தென்பவர் வள்ளுவர்.
இன்பித்தல் நட்பினால் நேசமுடன் பெருகிடும்.
அன்பான இன்சொல் நற் பழமே
ஒன்று கூடுதலும் அன்பான நிகழ்வே!
ஒன்றாமை நோய் அன்பின்மையால் பெருகும்.
அன்றுதல், அடம், அகங்காரம், துரோகம்
அன்பினை அடைக்கும் தாழ் காண்!
அன்பினால் உலகை ஆளலாம் கேள்!
அன்பில்லாதோன் சுயநல அவகுணம் நிறைந்தோன்.
அன்றினாரையும் இணைக்க அன்பால் முடியும்.
வன்மையற்ற நேசிப்பு இன்னலற்ற தெய்வீகம்!
துன்பம் அழிப்பது இன்னமுத அன்பே
அன்பினாலான இன்சொல்லும் பெரும் தர்மமே
உன்மத்தம் உடையவன் குறை அன்பின்மை.
மேன்மை உயர்ச்சி பாசத்தால் நிறையும்.
மென் தலைகோதும் உணர்வும் அன்பாலிணைவதே
அன்பூர மனமிளகும் எறும்பூரக் கற்குழிதலாய்.
4-6-2018